Wednesday, October 30, 2013

இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!


உறவுகள் மட்டுமல்ல
 ஊரும் மரணத்திற்கு அழுதால்
 வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !
-
—————–
-
இறப்பு இல்லை
 இறந்தும் வாழ்கிறார்கள்
 பொதுநலவாதிகள் !
-
——————
-
வராது நோய்
 பசித்த பின்
 புசித்தால் !
-
———————
-
உச்சரிக்க வேண்டாம்
 முன்னேற்றத்தின் எதிரிகள்
 முடியாது தெரியாது நடக்காது !
-
———————-
 -
நாளை என்று
 நாளைத் தள்ளிட
 நாள் உன்னைத் தள்ளும் !
-
——————
-
உடலை உருக்கும்
 உருவமில்லா நோய்
 கவலை !
-
——————–
-பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !
பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !
-

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைவதற்கு உழைப்பார்கள். அது மிகவும் நல்லதுதான் என்றாலும், அத்தகைய குறிக்கோள் உங்களுடைய கனவுக்கு வலிமை சேர்ப்பதாகவும், கனவுகளை நனவாக்குவதற்கான செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும்.

கனவு நனவாகும் வரை நீங்கள் கவனமாகவும், மென்மையாகவும் செயல்பட வேண்டும். எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமாகவும் அன்பாகவும் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோபப்படுவதும், எரிச்சலடைவதும் கூடவே கூடாது. அத்துடன் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே சுயதிறனாய்வு செய்து தேவையற்ற மனோபாவத்தையும் குணங்களையும் நீக்கி விடுங்கள்.

உதவி செய்தல், புன்னகை புரிதல், சாந்தமாகப் பேசுதல் போன்ற நற்பண்புகள் உங்களுடைய கனவை நனவாக்குவதற்கு நிச்சயம் உதவும். உங்களுடைய வாழ்வில் வரும் நல்ல சந்தர்பங்களை நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்தி உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்காட்டுங்கள். உங்களுடைய இலட்சியக்கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.


1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.


2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.


3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.


4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல


5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல


6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?


7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்


கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.


8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.


9.        கஷ்டம் தான் … ஆன முடியும்.


10.      நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.


11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?


12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?


13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.


14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.


15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?


16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?


17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.


18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.


19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.


20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.


21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.


22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.


23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.


24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு


வேலையை ஆரம்பி.


25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு


ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.


26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,


அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?


27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?


28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.


29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?


30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி


இல்லையா?


31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே


போதும்.


32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?


ஆம், நண்பர்களே,



    * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்


    * ஒன்பது முறை விழுந்தவனுக்கு இன்னொரு பெயர் உண்டு- எட்டு முறை எழுந்தவன் எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில!



அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு




ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி
 



இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை




ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை



உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்



ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை



கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி



சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்



தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு
 


நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை



பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல்



மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்
 


யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி



ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை

 ல


லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்



வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்



ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்



ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்

இப்படியும் சில பழமொழிகள்!

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்


* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்


* கார் ஓட டயரும் தேயும்


* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு


* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை


* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்


* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்


* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது


* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல


* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்


* முடியுள்ள போதே சீவிக்கொள்


* பழகின செறுப்பு காலை கடிக்காது


* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி


* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?



பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம்.


பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.


வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.


இந்திய காவியமான இராமயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பொழுது, இராமனுக்கு அடையாளமாய் சீதை தன் மெட்டியை (கணையாழியை) கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அப்பொழுது இருந்தே பெண்கள் மெட்டி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.


மேலும் மெட்டியை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர் மார்ஜொரி போரேல் என்பவர். இந்தியாவில் இருந்து திரும்பி சென்றவுடன் 1973ல் நியூயார்க்கில் மெட்டி வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவர் முதன் முதலில் ஆரம்பித்த மெட்டி கடை நியூயார்க் 59வது தெருவில் அமைந்துள்ளது.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்


1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

'புத்தி இல்லையேல் என் செய்வது' (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் கடுமையாக அவன் வயலில் உழைத்து தக்காளி பயிரிட்டு வந்தான்.

தக்காளி அமோகமாக விளையும்..அதில் சில சொத்தை தக்காளிகளும் இருக்கும்...அவற்றை அவன் ...தன் வீட்டில் இருக்கும் மாடுகளுக்கும்,ஆடுகளுக்கும் உணவாக போட்டு வந்தான்.

அவனது உழைப்பு,செய்கை,குணம் எல்லாவற்றையும் பார்த்த இறைவன் அந்த ஆண்டு அவன் வயலில் விளைந்த தக்காளி முழுவதையும் சொத்தை தக்காளியாக இல்லாமல் நல்லவைகளாகவே வளர அருளினார்.

அதைப்பார்த்த விவசாயி மிகவும் கவலைப்பட்டான் .ஊரார்..;ஏன் கவலையாக இருக்கிறாய்....? இந்த வருடம் தான் தக்காளிகள் நன்றாக விளைந்திருக்கிறதே..?' என்றனர்.

;என் வயலில் விளைந்த சொத்தை தக்காளிகளை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் போட்டு வந்தேன்.இப்போது எல்லா தக்காளிகளும் நன்றாக இருப்பதால்...நான் அவற்றிற்கு போட சொத்தை தக்காளிக்கு எங்கு போவேன்...?' அதுதான் என் கவலை என்றான்.

கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும் புத்தியை உபயோகிக்க தெரியாதவர்களுக்கு ...ஆண்டவன் அருள் கிடைத்தாலும் பயன் இல்லை...

கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா - சுற்றுலாத்தலங்கள்!

      கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா

கல்லில்கண்ட கலைவண்ணம் அஜந்தா



கல்லிலே கண்ட கலைவண்ணமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன அஜந்தா குகைகளும், அதனுள்  தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும்!.

குகைகளைக் குடைந்து உருவாக்கப்படும் கோவில்களுக்கு குடைவரைக்கோவில்கள் என்று பெயர். அஜந்தாவும் இந்த ரகம்தான். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
 குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர். கி.மு.2 முதல் கி.பி. 6ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இதுபற்றி குறிப்பெழுதி-யிருக்கிறார்.


காட்டுப்பகுதிக்குள் கரும்-பாறைக்குள் புதைந்து கிடக்கும் இந்த கலைப்பொக்கிஷம் 1819ம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்த ஆங்கிலேய ராணுவ அதிகாரி இந்தப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது இதைக் கண்டுபிடித்துள்ளார். சலசலத்துக் கொண்டிருக்கும் வகோரா நீரோடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டுகிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76மீட்டர். இங்கு நடந்த பல்வேறுகட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. பாறைகளில் மட்டுமல்ல, கூரைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் நம்மை ஓ போட வைத்துக்-கொண்டிருக்கின்றன.

கலைநயம் மிக்க ராட்சத தூண்கள், மண்டபங்கள், சிலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகையிலும் ஒவ்வொருவகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும் அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. பார்க்கப் பார்க்கப் பரவசப்படுத்தும் ஓரிடம் அஜந்தா. இதை 1983ம் ஆண்டில் உலகப்பண்பாட்டுச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ.
எப்படிப்போகலாம்?
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அஜந்தாவுக்கு சாலை வசதி உள்ளது. ரயிலில் செல்பவர்கள், ஜல்கானில் இறங்கி விடலாம். இங்கிருந்து 50 கி.மீ தொலைவுதான் அஜந்தா. விமானப் பயணத்தைப் பொறுத்தவரை அவுரங்காபாத்தில் விமான-நிலையம் உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அவுரங்காபாத்திற்கு தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவுரங்காபாத்தில் இருந்து அஜந்தா 107 கி.மீ தொலைவில் உள்ளது. அஜந்தா குகைகளை இந்திய நேரப்படி காலை 9மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடலாம். கட்டணம் உண்டு.