Friday, September 20, 2013

தென்னையும் நாணலும் - நீதிக்கதை!


 
 
ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
 

'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...
 
 
எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.....
 

சில நாட்கள் கழிந்தன....
 

மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
 

புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..
 
 
தென்னையோ புயலை எதிர்த்தது..
 

தென்னை வேரோடு சாய்ந்தது....

நாணல் எந்த சேதமும் அடையவில்லை....
 

நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.
 
 

வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!


   வீரமிகு செஞ்சிக்கோட்டை
 

 
வீரமிகு செஞ்சிக்கோட்டை.
 
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.
மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்கள் பாதுஷாபாத் என்றார்கள்  ,சோழர்கள் சிங்கபுர நாடு என்று கொண்டாடினார்கள் 
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.
பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
 
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
 
செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் ஆராய்ந்தால்.. கி.மு. முதல் கி.பி 6 முதல்இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பல்லவர் காலத்தில் கிபி 600முதல் 900 முதல் சிங்கபுரத்தில் ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580 முதல் 630 வரை விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது. தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களில், செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர் என்கிறது கல் வெட்டுக்குறிப்பு.  அதுமட்டுமல்ல தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் செஞ்சி விளங்கியதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது
 
புராணப்படி பார்த்தால் செஞ்சி வந்ததிற்கான தெய்வீக தகவல் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றது
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் புராணக்கதை  சொல்கின்றது
.
தேசிங்குராஜாவும் செஞ்சிக் கோட்டையும் 
 
ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை அதனால் குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லிக்கு வர சொன்னார் சுல்தான், அவருக்கு துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தனக்கொரு  வாய்ப்பளிக்கும்படி   தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது .அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்து எல்லோரையும் ஆச்சர்யமூட்டினான்
அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்தார்  சுல்தான். அது மட்டும் அல்ல.. இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் தேசிங்கிற்கு மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய். இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை..
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அந்த ஆலயத்தில் பள்ளிக்கொண்டிருக்கும்
ஸ்ரீ அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். அதேப் போன்று எந்தப்போருக்குச்சென்றாலும்  அரங்கனிடம் உத்தரவு பெற்ற பின்பு தான் போருக்கு புறப்படுவாராம் ஒரு முறை ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட நேர்ந்தபோது... தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு ஸ்ரீஅரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டது அதனால் ... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ஸ்ரீரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணும் போது இது உண்மை சம்பவமே என்பது புலப்படும்
 

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன..
 
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

கோட்டையுள் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்துள்ளது வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.
 
ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான் என்கிறது கல்வெட்டு செய்தி
 
பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காலத்தாலும் அழிக்கமுடியாத பொக்கிஷமாக காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.
வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.
தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.
கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வந்த பின்பு தான் நாம் மீண்டும் இந்த நூற்றாண்டுக்கு திரும்பிவந்த உணர்வு ஏற்படும்

ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
 
சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களைப் பார்த்து, வரலாற்றை நேரில் பார்த்த அனுபவத்தை பெற்றிடுங்கள் .
இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.

பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)



ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..


இலையுதிர் காலம் வந்தது...



மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.



அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...


அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள் இல்லாவிடில்...
அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..




அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.



பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.



மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..



உடனே பள்ளம்..      இலயைப் பார்த்து ..

'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..


மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.

அதற்கு அந்த இலை

'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...
அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..
ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. 
என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.

மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..
நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.

நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

வியக்கவைக்கும் பூம்புகார்..! - சுற்றுலாத்தலம்!


வியக்கவைக்கும் பூம்புகார்..!
 
வியக்கவைக்கும் பூம்புகார்..!
 
பூம்புகார் சிலப்பதிகாரத்தின் நாயகன் - நாயகி வாழ்ந்த ஊர்
சோழப்பேரரசின் தலைநகராக இருந்த இந்த ஊருக்கு காவிரிப்பூம்பட்டினம் என்றும் இன்னொரு பெயரும் உண்டு.
சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

நம் தமிழ் மண்ணில் 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்க்கான சந்தையாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரத்தின் பெருமையை போற்றுகின்றன.

தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.

மகதம், அவந்தி, மராட்டா நாட்டுக் கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது. இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப் படகுத்துறை, புத்தர்விகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டடங்கள், காசுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.
 
 
இன்று ஒவ்வொரு தமிழரும் காண வேண்டிய அற்புதச் சுற்றுலாத் தளமாக பூம்புகார் விளங்குகிறது
சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை காணும்போதுகண்ணகி வாழ்ந்த காலத்துக்கே நாம் சென்றுவிட்ட உணர்வு ஏற்படும். பூம்புகாரின் இன்னொரு முக்கியமான சிறப்பாக காவிரி நதி இங்குதான் கடலில் சங்கமிக்கிறது.

கடற்கரை நகரமான பூம்புகாரில் பிரமிப்பூட்டும் வகையில் விளக்குத்தூண், கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.
கண்ணகி கோட்டத்தில் கண்ணகி சிலை அமைந்துள்ளது.
இலஞ்சி மன்றத்தில் தான் பண்டைய கால வரலாற்றின் படி குளம் அமைந்திருந்ததாம். அதனை நினைவு கூறும் வகையில் தமிழக அரசின் மூலம் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே மூன்று கட்டிட அமைப்புகள் ஒருங்கே சிறப்புடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் இருமருங்கிலும் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைந்துள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்துள்ளன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கப் பட்டுள்ளது
.
3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் இங்கே பிரமிப்பூட்டும் வகையில் கற்சிற்பமாக வடிவமைக்கப்படுள்ளன
.
பூம்புகாரின் கடலடியில் அருங்காட்சியகம் உள்ளது. இது தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் என்ற தனிச்சிறப்பு பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சிரட்டைச் சில்லிகள், புத்தர் தலை மற்றும் புத்தர் பாதஉருவாரம், பெருங்கல் மணிகள், ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள், மரக்கலைப் பொருட்கள், வட்டக்கிணறு, பெருங்கற்கால சேர்ப்பொருட்கள், சீன ஜாடிகள், பிரித்தானிய குளிர் ஜாடிகள், ஈயக்கட்டிகள், புத்தர் சிலை, சிலம்பு, ஐயனார் கற்சிலை, கப்பல் மாதிரி பொம்மைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வுகள் கூறும் அற்புத தகவல்கள்
 
ந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ”தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
 
இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, மார்ச் 7, 1991 ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் சோனோகிராப் எனப்படும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச், 8,9ல் ஆய்வாளர்கள் கடலுக்குள் மூழ்கி,, இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரை லாடம் வடிவத்தில் கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள் . அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர்.
இதையடுத்து 2001 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டகிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு வியக்கவைக்கும் செய்திகளை வெளியிட்டார்.

பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரமாண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்பதை இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்தார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது போல் தற்போதைய ஈராக்கிலுள்ள ''மெசபடோமியா'' பகுதியில் சுமேரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
நாகரீகத்தை விட இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானது
பூம்புகார் நாகரீகம் என்பது தெளிவாகிறது

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்'' எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு கிலன்மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார். மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ”அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சென்னையிலிருந்து காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் கருவி என்னும் இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில் பூம்புகார் அமைந்துள்ளது.

'ராமனும் - பேசும் கிளியும்'.(நீதிக்கதை)


 
 
யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன்.

ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள் ..கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்,,'இந்தக் கிளி பேசும் கிளி 'என்றான்.
 

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்...வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான்.ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை..
அதை அவன் எடுத்துக்கொண்டு ..தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.
 

அந்த வியாபாரியோ ..அந்தக் கிளியை வாங்கி ..பரிசோதிப்பது போல பாசங்கு செய்து ..இந்த கிளிக்கு காது கேட்காது ..அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு அதனால் பேச இயலவில்லை..என்று சொல்லி ..வேறு ஒரு கிளியைக் காட்டி ..'இதை வாங்கிக் கொள்ளுங்கள்..இது பேசும்..' என்றான்.
 

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்.அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான்.அதுவும் பேசவில்லை.
அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார்.அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.
 

உடனே அந்த நண்பர் 'அடடா ..என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே ..அந்த வியாபாரி ஒரு புளுகன்..பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு' என்றான்.
 

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான்.யார்..என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து ..அது சாத்தியமா..என யோசித்து செயல்படவேண்டும்.