Thursday, October 10, 2013

தமிழர்கள் வரலாறு ! - காவிரிப்பூம்பட்டினம்!

                                                        
காவிரிப்பூம்பட்டினம்



தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.


சோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.



                           


சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர்,     'மருவூர்ப் பாக்கம்',      'பட்டினப்பாக்கம்',      'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.

மருவூர்பாக்கம்:

           இது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.

பட்டினப்பாக்கம்:

            இது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர். 

கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.




 


வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் 'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.


இளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:



"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயனும் ....ஈழத் துணவும் காழகத் தாக்கமும்அரியவும் பெரியவும் நெரிய ஈண்டிவளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்பாலை 185-193).
 
மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். 



'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.


உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் 'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.



மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை "மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் " ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).



இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்


1.வெள்ளிடை மன்றம்,


2.இலஞ்சி மன்றம்,


3.பூத சதுக்கம்,


4.நெடுங்கல் நின்ற மன்றம்


5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .


மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில்


1.மலர்வனம்,


2.உய்யாவனம்,


3.சம்பாதி வனம்,


4.சுவேர வனம் மற்றும்


5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்


சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:



"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் " (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).


இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').



ஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: "மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது.




மணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக குறிப்பிடுகிறது.



அங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு "சிலபதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...




லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

 


உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே ! 


ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம். மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று…இன்று நாம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களுக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.


ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட டைப்ரைட்டர்களில் சிலிண்டர்கள் நட்டுக்குத்தலாக இருந்தன. இதனால், மேட்டரை டைப் செய்து பேப்பரை வெளியில் எடுத்துத்தான் மேட்டரை படிக்கமுடியும். முப்பதாண்டுகள் பழக்கத்துக்கு பிறகுதான், இப்போதுள்ள டைப்ரைட்டரை வடிவமைத்தார் ஹென்றி மில். 


கீ- போர்டும் முதலில் அல்ஃபபெட்டிக்கல் ஆர்டரில் தான் இருந்தது. பின்னர், ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை 'ஹோம் கீஸ்' என்றழைக்கப்படும் நடுவரிசைக்கு கொண்டுவந்தனர். அப்புறம் தான், டைப்ரைட்டர்கள் சரளமாக தடதடக்க ஆரம்பித்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2-வுக்கு மேல் கல்வியை தொடர முடியாத ஏழைகளுக்கு டைப்ரைட்டிங் கோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால், இப்போது? 


அன்று ஹவுஸ் ஃபுல்லாய் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் இன்று பழைய படங்கள் ஓடும் சினிமா கொட்டகைகள் கணக்காய் காத்தாடுகின்றன. பல ஊர்களில் இன்ஸ்டிடியூட்டுகள் மூடப்பட்டு கம்ப்யூட்டர் சென்டர்களாக மறு அவதாரம் எடுத்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் டைப்ரைட்டர்களை கம்ப்யூட்டர்கள் கபளீகரம் செய்துவிட்டன. ஒருசில அரசு அலுவலகங்களில் மட்டும் இன்னமும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை கக்கிக் கொண்டிருக்கின்றன டைப்ரைட்டர்கள் .இப்படியே போனால், அடுத்த சில ஆண்டுகளில் டைப்ரைட்டர்களை தொல்லியல் துறை சொந்தம் கொண்டாடி விடும் போலிருக்கிறது. 


டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களை கேட்டால், ‘’ஸ்ட்ரென்த் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை’’ என்று டைப்ரைட்டரைவிட வேகமாக தடக்கிறார்கள். விடுமுறையை வீணடிக்க இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவர்கள் எப்படி டைப் இன்ஸ்டிடியூட்களை தேடி வருவார்கள்? முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகி இருந்தால் தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளை எழுத முடியும். அப்புறம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலானவர்களும் என்றாகி… இப்போது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தமிழ்நாடு அரசின் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வுகளை எழுதலாம் என்றாகிவிட்டது. அதிலும் ஒரு அதிரடி சலுகையாக 6-ம் வகுப்பு பாஸானவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்பீடு டெஸ்ட் மட்டும் எழுதலாம், இரண்டாம் தாள் கிடையாது என்கிற அளவுக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்களுக்கு அடிமாட்டு ரேஞ்சுக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இத்தனை சலுகைகளை வாரித் தெளித்தாலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களில் '’தட்தடா தட்தடா' என டைப் அடித்துக் கொண்டிருந்த தாவணி பெண்களைப் போல இப்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களும் அரிதாகி விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்ஸ்டிடியூட்களிலும் ஸ்ட்ரென்த் இல்லை. தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளால் மட்டுமே இன்ஸ்டிடியூட்டுகள் ஓரளவு தள்ளாட்டத்திலாவது ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய டைப்ரைட்டர்கள் விற்பனை இல்லை என்கிறார்கள். 


இன்ஸ்டிடியூட்டுகளில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்ல முடியும். பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இபோதே ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து, ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ? 


டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!

 
அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்களை பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா. இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்களை வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புட்டின்! 


தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு !



தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப்

பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான்.

மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.

இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.

முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகளை ஈன்றெடுத்த மண். கர்நாடக இசைத் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. காவிரி

தவழும் கவின்மிகு பூமி. தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம்

பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது. மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த

இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும்

சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி

நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.

நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)!



ராமன் தனது மனைவியுடனும்,அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனது நண்பன் முருகன்...நீயாவது...மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான்.

உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்.

அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான்....ராமா..உன் மனைவியை விட நீ வயதானவன்..ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான்.உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும்..கந்தன் வந்தான்...அவன் ராமனைப் பார்த்து..'குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே..இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே' என்று சொல்ல ராமன் தன் மனைவியையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

அப்போது அவன் மற்றொரு நண்பன் சரவணன் வந்தான்.'ராமா..உனக்கு மூளை இருக்கா..குதிரை வாயில்லா மிருகம்.அதில் இருவர் ஏறி அதன் சுமையை ஏற்றலாமோ ..என்றான்.'

எப்படிச் செய்தாலும் யாரேனும் ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்..ஆகவே நாம் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் மதிப்பளித்தால் முட்டாள் பட்டம் தான் கிடைக்கும்.

ஆகவே மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நம் மூளையை உபயோகித்து நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவேண்டும் என ராமன் உணர்ந்தான்.
 
 

'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!



      'மனைவி கட்டிய தாஜ்மஹால்'

 'மனைவி கட்டிய தாஜ்மஹால்'
காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால்.
 அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம். அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில் மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய தாஜ்மஹால்.
 
ஹுமாயுன் என்கிற நஸ்ருதீன் ஹுமாயுன். பாபரின் புதல்வர். அக்பரின் தந்தை. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி செய்தவர். கி.பி. 1530- 40வரையிலும் 1555- 56வரையிலும் ஹுமாயுன் ஆட்சி நடந்தது. 1556ல் தனது நூலகத்தின் படிகளில் இருந்து தவறி விழுந்து எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.
 
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மனைவி ஹமீதாபானு பேகம் விருப்பப்படி கட்டடம் எழுப்பப்பட்டது. இதற்காக பாரசீக கட்டடக்கலை நிபுணர்களான சையத் முகமது, அவரது தந்தை மிராக் கியாதுதீன் ஆகியோரை ஆப்கானிஸ்தான் ஹெரத் நகரில் பிரத்யேகமாக வரவழைத்துள்ளனர். சுமார் 8ஆண்டுகளாக கட்டடப்பணி நடந்துள்ளது. சதுரவடிவிலான அழகான நந்தவனங்கள், நீரோடைகள், நடுவே மாளிகை வடிவத்தில் நினைவிடம் என பாரசீக பாணியில் கட்டி முடிக்கப்பட்டது. செக்கச்சிவந்த சிவப்பு கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்கள் கலந்து உருவாக்கப்பட்ட இந்த கட்டடம் இன்றளவும் அதே அழகுடன் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
 
இதை கணவர் ஹுமாயுன் நினைவாக கட்டுவதற்கு உத்தரவிட்ட ஹமீதாபானு பேகம் இறந்தபிறகு அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, டெல்லியை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர்ஷா உள்ளிட்ட பல மன்னர்களின் கல்லறைகளும் இங்குள்ளன. 1857-ம் ஆண்டில் நடைபெற்ற கலகத்தின் போது இரண்டாம் பகதூர்ஷா இங்கே மறைந்திருந்ததாகவும், அவரை லெப்டினென்ட் ஹாட்சன் இங்கிருந்துதான் பிடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
வரலாற்று நினைவுகளையும் வனப்புகளையும் தாங்கி நிற்கும் ஹுமாயுன் கல்லறை, 1993ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்வது?
 
டெல்லியிலேயே இது அமைந்துள்ளதால் எங்கிருந்தும் எளிதாக சென்றடையலாம். நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ரயில் வசதி இருக்கிறது. டெல்லியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது.

சந்தேகம் - குட்டிக்கதைகள்!




Image hosted by Photobucket.com


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.


அப்போது இறைவன், ""தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.

அடுத்தவன், ""நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,'' என்றான்.

மற்றவன், ""நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,'' என்றான்.

இன்னொருவன், ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,'' என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ""அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

""தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.

""கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

""யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, ""இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.