Monday, October 14, 2013

நாகப்பட்டினம் மாவட்டத்தின் வரலாறு!



சோழ ராம்ராஜ்ஜியத்தில் புகழ்பெற்று விளங்கிய கடற்கரை பட்டினம்தான் நாகப்பட்டினம். சோழப்பேரரசின் மண்டலங்களில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி மாமன்னன் ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் அக்டோபர் 18, 1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான வரலாறு இந்தப் பட்டினத்துக்கு உண்டு என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.


நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.



கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.



நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

வெற்றித்திருநகர் ஹம்பி - சுற்றுலாத்தலங்கள்!

    வெற்றித்திருநகர் ஹம்பி
ர்நாடக மாநிலம் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள அழகான கிராமம் ஹம்பி. விஜயநகரப்பேரரசின் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் ஓர் அங்கம். பிரசித்தி பெற்ற சிவாலயமான விரூபாக்ஷா கோவில், ஹம்பியின் இன்னொரு அடையாளம். இன்னும் பல அடையாளச் சின்னங்கள் ஹம்பியில் உண்டு.
ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள குரங்குகளின் ராஜ்ஜியமான கிஷ்கிந்தாவுக்கும் ஹம்பிக்கும் தொடர்பு உண்டாம். ஹம்பியில் மக்கள் குடியேற்றம் கி.பி.முதலாம் ஆண்டில் தொடங்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் ஹம்பியில் பெரிய கட்டிடங்கள், பிரம்மாண்டமான விக்ரகங்கள் எழுப்பப்பட்டன. தொலைதூரத்தில் இருந்து பார்த்தாலும் அவற்றைக் காணமுடியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இப்போது இல்லை.
 
ஹம்பியின் தெய்வீக அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் விரூபாக்ஷா கோவில் மிகவும் பழமையானது. மூன்று கோபுரங்களைக் கொண்டது. கோவிலை சீரமைத்து மண்டபம் கட்டியவர் கிருஷ்ணதேவராயர். விஜயநகர மன்னர்களின் குலதெய்வம் விரூபாக்ஷர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்பியில் உள்ள விட்டல் கோவிலும் கிருஷ்ணதேவராயர் கட்டியதே. கலைநுணுக்கத்துடன் கூடிய சிற்பங்கள் இங்குள்ளன. இதே போல கோதண்டராமர் கோவில், தாமரை கோவில் போன்றவையும் சிறப்பு வாய்ந்தது. ஹம்பியில் உள்ள நினைவுச்சின்னங்கள் 1986ம் ஆண்டில் யுனெஸ்கோ சார்பில் உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
 
எப்போது போகலாம்? எப்படிப் போகலாம்?
 
ஹம்பியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் கர்நாடக அரசு சார்பில் விஜயநகர விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்டோபர் - மார்ச் மாதங்கள் வரை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் ஹம்பி அமைந்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் முக்கிய நகரங்களான ஹாசன்,  மைசூர் போன்ற இடங்களில் இருந்தும் ஹம்பிக்கு நல்ல சாலைவசதி இருக்கிறது. ஹம்பியில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவில் உள்ள ஹோஸ்பேட் வரை ரயில்வசதி உண்டு. பெங்களூருவில் சர்வதேச விமானநிலையம் உள்ளது.