Sunday, August 31, 2008

டயானா, வேல்ஸ் இளவரசி மாண்டு போன தினம்!



உலகின் கண்ணி வெடிகளை அகற்ற தன் ராஜ அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்திய தொண்டுள்ளம் கொண்ட ஒரு இளவரசியின் வாழ்வில் ஏற்பட்ட பரிதாப முடிவின் கதைதான் இது.

கூரைக் கொட்டடியில் வாழ்பவரும் தன் செயலூக்கத்தால் ஒரு நாட்டுக்கே ராணியாகமுடியும் என்று அச்சிடப்பட்டு படமாக்ககப்பட்ட கதைகளில்தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் தற்காலத்திலே அதேபோல் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு தன் ஆற்றலால் ராணியானவர்தான் டயானா.

31 - diana_tout
 

வேல்ஸ் இளவரசி டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர், (ஜூலை 1, 1961 – ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி இவர். இவர்களின் காதல் கதை சுவாரசியமானது. உலகப்பிரசித்தம் பெற்றது. காதல் கனிந்து இல்வாழ்க்கையில் ஈடுபட்டனர். இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள்.
இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய அரசில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்குப் பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி “இவரது மரணம் டயானாவின் கார் ஓட்டுநர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராசிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது” எனத் தீர்ப்புக் கூறப்பட்டது.
15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கை யால் மீடியாக்களில் படாதபாடுபட்டார் டயானா.

விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலை செய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவணமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்ட வாறு எழுதியும் வைத்தார்.

”இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்…”
இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார்.

எயிட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றிருந்தார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.
அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்தப் படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நள்ளிரவு. உலகிலேயே அதிக விலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒன்றாகக் கூறப்பட்ட அந்தக் கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர் மற்றும் ஓட்டுநர் என்று நால்வரைச் சுமந்து சென்றது.

டயானாவின் நடத்தைகளைப் புகைப்படமெடுத்து பரபரப்பு செய்தி களை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிகைப் புகைப்படக் குழுவினர் டயானாவின் காரை அசுர வேகத்தில் பின்தொடர்ந்தனர்.

பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சில வினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்க்காப்பாளர் மட்டும் உயிர் தப்பினார்.

டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்தப் புகைப்படக் குழுவி னரை நோக்கிப் பாய்ந்தன. ஃபிரான்ஸின் தடவியல் துறையினருடன், உளவுத் துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில் ஓட்டுநர் அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும் அதனா லேயே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளான தாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிகைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின “அவள் அரச குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாலேயே பலி வாங்கப்பட்டார்.”
டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6ம் நாள் நடை பெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னாள் கணவர் சார்லஸ், அவரது அரச குடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் தொடங்கிய 110 அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று (இன்று அந்த நாள்) தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் அழகாலும் சேவை மனப்பான்மையாலும் உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு அரண்மனை, கணவன் என்று முடங்காமல் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர்களுக்கும் மேலாகப் புகழ் பெற்றுவந்தார் டயானா.
இது மன்னர் குடும்பத்துக்கு சங்கடத்தைத் தந்தது நாடறியும். அதனால் குறைந்த காலத்திலேயே அவரது வாழ்வும் தொண்டும் முடக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய ஒரு இளவரசியின் வரலாறை இந்தப் பூமி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்காது.

இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டியது அவசியம்!

மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர் நம்முடைய முன்னோர்கள்.இவற்றின் நீர்ப்போக்கைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாய்க்கால்கள் மூலம் ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கும் நீர் செல்ல பாதை வைத்திருக்கிறார்கள்.

இதேபோலத்தான் கோவில்களுக்குள் இருக்கும் குளங்களும். எல்லாக் குளங்களுக்கும் நீர்வழிப்பாதை உண்டு. இப்போது அவையெல்லாம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த தகவல்.குளங்கள், ஏரிகள் இல்லாவிட்டால்தான் என்ன என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏராளமான கோடிகளைக் கொட்டி ஆற்றுப் படுகைகளில் இருந்து தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்டங்கள், இந்த மனப்பான்மையை நீரூற்றி(!) வளர்த்து விட்டிருக்கலாம்.

31 - india_river

 

குடியிருப்புப் பகுதிகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரும்போது, அருகே ஏன் குளம், ஏரி என்று கேள்வி எழுப்புகிறார்கள் பலர். இதனால், நீர்வழிப் பாதைகளை அடைத்துவிட்டு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை எழுப்பி, வாய்ப்புள்ள குளங்களில் கூடாரம் எழுப்பி, கிணறு வெட்டி, டிராக்டர் விட்டு உழுது விவசாயம் பார்க்கும் “பெரிய’ மனிதர்களும் இருக்கிறார்கள்.
இன்னும் பல இடங்களில், அரசு சொத்தான குளம், ஏரிகளை பட்டா போட்டு விற்று கைமாற்றிவிட்ட சோகங்களும் இருக்கின்றன. சில இடங்களில் அரசே குளங்களை மூடிவிட்டு கட்டடங்களை எழுப்பிவிட்டது, ஏழைகளுக்கென இலவச மனைகளாகவும் வழங்கியிருக்கிறது.

தண்ணீர் எங்கே வருகிறது என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். படிப்படியாக நீர்வரத்தை மூடிவிட்டு வீடு கட்டினால் தண்ணீர் வரத்து இருக்காதுதான்.பெருமழை பொழியும்போது பெருவெள்ளமாகப் பிரவாகம் எடுத்த தண்ணீர் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்லும்போது, “வெள்ளம் வந்துவிட்டது’ என்கிறார்கள். காரணம் என்னவென்று பார்க்கத் தவறுகிறார்கள்.

வெறுமனே பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும், வீட்டு உபயோகங்களுக்கும், குடிக்கவும் மட்டுமே தண்ணீர் தேவை என்பதல்ல, இந்தப் பூமிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. பூமியும்கூட இயங்கும் உயிரினம்தான். எந்தச் சந்தேகமும் தேவையில்லை.

நிலத்தடியில் தண்ணீர் இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் நல்ல தண்ணீர் கடலுக்குள் சென்று கடலின் உப்புநிலையைச் சமப்படுத்தவும் வேண்டும்.

எனவே, “கடலுக்குள் வீணாகக் கலந்தது’ என்ற வாதமும்கூட சரியானதல்ல.
அதேநேரத்தில், தேவைக்கு பயன்படுத்தாமல் தவறிவிட்டோம் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது.

அண்மையில் கர்நாடகத்தில் பெய்த மழையால் காவிரியில் “தானாக’ வந்த தண்ணீர், காவிரி- கொள்ளிடத்தில் கரை ததும்பிச் சென்றும்கூட, அருகேயுள்ள சிறு வாய்க்கால்களும், குளங்களும் வழக்கம்போல மண்மேடாகக் காட்சி தந்ததையும் காண முடிந்தது.

ரத்த நாளங்களை வெட்டிவிட்டு உடல் உறுப்பு செயல்படவில்லையென குறை சொல்ல முன்வந்திருக்கிறோமே. என்ன மருந்து சாப்பிட்டாலும், நவீன சிகிச்சை எடுத்தாலும், ரத்தம் செல்லாவிட்டால் உயிர் இருக்குமே தவிர, உடல் சடலம்தானே?

எனவே, ரத்த நாளங்களைப் போன்ற வாய்க்கால்கள், குளங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இப்போது அந்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதை முழுமையாக – முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.
அதோடு, அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த நீர்வழிப் போக்குகள் குறித்து பட்டியல் எடுத்து, குறைந்தபட்சம் தற்போது எந்தச் சிக்கலும் (ஆக்கிரமிப்பு) இல்லாமல் இருக்கும் பாதைகளையாவது முதல் கட்டமாக கைவைத்து சீரமைத்து ஒழுங்கு செய்ய வேண்டும்.எதிர்காலத்தில் எந்த வகையிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்கவும், அரசேகூட ஆக்கிரமிக்க வழியில்லாமல் செய்யவும் தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை கொண்ட சட்டத் திருத்தங்கள் அவசியம்.

அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினால், எந்த மாநிலத்தாரிடமும்- எந்தக் காலத்திலும் தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் நிலை வராது.”யாரோ செய்கிறார்கள், நல்லவர்கள்’ என்ற ஒற்றை வரி வியாக்யானத்தோடு நிறுத்திக் கொண்டு, கடந்து செல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் தன்னார்வ குழுவினரின் முயற்சிகளுக்கு கைகொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டிய அவசியம் குறித்து இன்னும் கூடுதலாக ஆய்வு செய்து, எளிமையாக தகவல் கையேடுகளை – பாடத் திட்டங்களை – வகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். “சிரம்’ கொடுத்துத்தான் தியாகம் செய்ய வேண்டுமென்பதில்லை, “கரம்’ கொடுத்தும் செய்யலாம்.